சென்னை: சென்னையில் எந்த இடத்தில் மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகளை காட்டச் சொல்லுங்க.. எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என இன்று தெரிவித்து உள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3 வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நேர்மை நகரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிஎம்டிஏ மூலம் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை பார்வையிட்டார். நீர்வளத்துறை ஆதாரத்துறையின் மூலம் தணிகாச்சலம் கால்வாயில் நடைபெறறு வரும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின். பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் வலுத்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோரிக்கைகள் வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை” எனப் பதிலளித்தார்.