ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் முந்தைய வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஶ்ரீநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போதைய பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பாஜக தனித்தே களம் காண்கிறது. காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம்- பேந்தர்ஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியும் தனித்து களம் காண்கிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்காக 44 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவித்தது. ஆனால் திடீரென இந்த வேட்பாளர் பட்டியல் திரும்பப் பெற்றது. பின்னர் 2 கட்டங்களாக 16 வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்தது. பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவுக்கு தாவியவர்கள், பாஜகவில் புதியதாக இணைந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டது.
அத்துடன் ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு காஷ்மீர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோம் அல்லது கட்சியை விட்டே கூண்டோடு ஓடிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் பாஜக 3-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் 29 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2-வது, 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது பாஜக அறிவித்துள்ளது.