சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்டிகோ விமானத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். விமானம்தான் ஆனால் ரோலர் கோஸ்டரில் செல்வது போல் ஒரு பயத்தை உண்டாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று மதியம் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பயணம் செய்தார். அப்போது தனக்கும், சக பயணிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரித்துள்ளார்.
இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தின் தரம் மோசமாக உள்ளதை அந்த நிறுவனம் சரி செய்ய வேண்டும். இந்த விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் ஒவ்வொரு பயணிகளும் வியர்த்து மூச்சு முட்டுவது போல் இருந்தனர்.
இந்த ஜூலை மாதம் வெப்பமான வானிலையின் போது, இந்த விமானத்தில் செல்வது ரோலர் கோஸ்டரில் செல்வதை போன்று ஒரு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் சர்வீஸ் செய்யப்பட வேண்டியது அவசியம்.
குறைந்த கட்டணத்தில் விமான பயணம் வழங்குவதால் பயணிகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அது போல் சேவைகளிலும் சிக்கனப்படுத்தக் கூடாது. இந்த விமானம் முழுவதும் எங்கோ வேலை பார்த்துவிட்டு தங்கள் குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்திருந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தவர்களும்தான் இருந்தனர்.
பலர் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்தனர். இன்னும் சிலர் தங்கள் சீட்டுகளை பிடித்து கொண்டனர். பல பயணிகள் விமானியை திட்டினர். உண்மையில் அவரை பாராட்ட வேண்டும், இந்த கொடூரமான வானிலையின் போது எப்படியோ சரியாக தரையிறக்கிவிட்டார்.
திருச்சியை ஒரு தொழில் நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டால் பயணிகள் விரும்ப மாட்டார்கள். இந்த திருச்சி விமான நிலையத்தை பலர் பயன்படுத்தி வருவதால் இங்குள்ள ஊழியர்களும் பணியாளர்களும் உலக தரத்திலான சேவைகளை வழங்க வேண்டும்.
இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையமாக திருச்சி உள்ளது. ஆனால் இண்டிகோ நிறுவனமோ பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்த வித அக்கறையும் செலுத்தாமல் லாப நோக்கில் செயல்படுகிறது. அதிக அளவிலான விமானத்தை இயக்கி வரும் இண்டிகோ இது போன்ற மோசமான விமானத்தை இயக்கி வருவதை ஏற்க முடியாது.
இண்டிகோவில் சிறந்த விமானிகள், சிறந்த பணிப்பெண்கள், சிறந்த ஊழியர்கள் உள்ளனர். ஆனால் இவர்களுடைய ஏடிஆர் குழு விமானங்கள்தான் மிகவும் மோசமாக உள்ளன. திருச்சி தொழில் நகரமாக வளர்ந்து வரும் நிலையில் திருச்சிக்கு சிறப்பான விமான சேவையை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.