பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இம்மாபெரும் தொழிலாளர் தின விழா, மே 1ஆம் தேதி பஹ்ரைன் கேரளா சமாஜம் உள்ளரங்கில் சிறப்புற நடைபெற்றது.
STAR VISION EVENTS & MEDIA PARTNERS பாரதி தமிழ் சங்கத்துடன் இணைந்து அரசாங்க அனுமதி முறையாக பெற்று இந்நிகழ்வினை அழகான வடிவில் முன்னெடுத்தனர்.
இவ்விழாவில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

தமிழ் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி திரண்டு அரங்கம் நிரம்பி வழிந்து, கட்டுக்கடங்காது இருந்தபோதிலும் ஏராளமானோர் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதிகாத்து நின்றுகொண்டே கண்டு ரசித்த உயர்பண்பு எல்லோரையும் கவர்ந்தது.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், பஹ்ரைன் நாட்டில் தொழிலாளர்களின் அபாரமான பங்களிப்பை பாராட்டுவதும், அவர்களை மகிழ்விப்பதும், கௌரவிப்பதுமாகும்.
அரசாங்க நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் அரங்கேறின . பஹ்ரைன் அரசாங்க நிறுவனங்களிலிருந்து உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
வளைகுடா அண்டைய நாடுகளிலிருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் வந்திருந்து நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டினர்.
பஹ்ரைன் அரசாங்க அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியை தொகுப்பாளராக , தமிழ்ச் சமுதாயத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திருமதி மீரா ரவி ஆங்கில மொழியில் திறம்பட கையாண்ட விதம் நிஜழ்ச்சியை மெருகேற்றியது.
நிகழ்ச்சியானது வழக்கப்படி “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலுடன் தொடங்கியது. சங்கத்தின் மகளிர் அணியினர் இசைத்தனர்.
முதன்மை சிறப்பு விருந்தினர்களும் , தொழிலாளர் தோழர்களும் ஒன்று சேர்ந்து பாரம்பரிய வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை மங்களகரமாக தொடங்கி வைத்தனர்.
முதன்மை விருந்தினர்கள்:
• மாண்புமிகு வினோத் கே. ஜேக்கப், பஹ்ரைன் நாட்டிற்கான இந்தியத் தூதர் – முதன்மை விருந்தினர்
• மாண்புமிகு முஸ்தஃபா அல் ஷைக், பஹ்ரைன் அரசு, தொழிலாளர் அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் – அரசாங்க விருந்தினர்
• மாண்புமிகு டாக்டர் கனிமொழி NVN சோமு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் – இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பித்த முதன்மை விருந்தினர்
• உயர்திரு பதுருத்தீன் அப்துல் மஜீத், சவூதி அரேபியாவிலிருந்து வந்து கலந்துக் கொண்ட தமிழ்ச் சமுதாயத் தலைவர்களில் ஒருவர் – சிறப்பு விருந்தினர்
நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
• தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி தொழிலாளர் தினத்தை கொண்டாடிய தருணம் மகிழ்வைத் தந்தது .
• தொழிலாளர்களுக்காக ஏராளமான பரிசுகள் விநியோகம் செய்யப்பட்டன.
• வரவேற்புரை - திரு. தாயகம் சுரேஷ், (பாரதி தமிழ் சங்கம் துணைத்தலைவர்) நிகழ்த்தினார். சங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார்.
• தலைமையுரை – திரு. வல்லம் பஷீர் (பாரதி தமிழ் சங்கம் தலைவர்) ஆற்றினார். பஹ்ரைன் வாழ் தமிழர்களின் சேவைக்காக பஹ்ரைன் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற இவ்வமைப்புக்கு சொந்தமாக கட்டிடம் எழுப்புவதே இந்த செயற்குழுவின் முக்கிய நோக்கம் என எடுத்துரைத்தார்.
(இதற்கான முன்னெடுப்பை ஜனவரி மாதம் நடந்த அயலக தமிழர் தினத்தின்போது, பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக சென்னை சென்ற பிரதிநிதிகள், இதற்கான அரசின் முறையான உதவிகள் பெற , தமிழக முதல்வரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
• மாண்புமிகு இந்தியத்தூதர் வினோத் கே. ஜேக்கப் உரையாற்றுகையில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், இந்நாட்டின் அபார வளர்ச்சியில் தொழிலாளர்கள் அளித்த விலைமதிக்கத்தக்க உயர்வான பங்களிப்பை உள்ளார்ந்து பாராட்டினார்.
• இந்திய மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பஹ்ரைன் நாட்டிற்கான முன்னேற்றத்தில் தமிழர்களின் சீரான பங்களிப்பை புகழ்ந்துரைத்தார் . மேலும் பஹ்ரைன் மண்ணில் மற்ற சங்கங்களுக்கு இருப்பது போன்று தமிழர்களுக்கென ஒரு நிரந்தர கட்டிடம் தேவை என்றும் , தமிழக அரசின் நிதியுதவி தேவைப்பட்டால் இதற்கான உதவிகளை பெற்றுத்தர இசைவு தெரிவித்தார்.
தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ் கலாச்சாரத்தை பரப்பவும், தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றவும், பொழுதுபோக்கிற்கு அம்சத்திற்காகாவும், அன்றாட பணிச்சுமை மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும் தமிழ் மக்களுக்காக பிரத்தியேக சொந்தக் கட்டிடம் அவசியம் தேவை என்ற முனைப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
• பஹ்ரைன் தொழிற்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக வந்திருந்த மாண்புமிகு முஸ்தஃபா அல் ஷேக் அவர்களின் மேலான வருகை, நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது.
வழங்கப்பட்ட விருதுகள்:
• இந்திய பஹ்ரைன் நட்புறவு தொழில் முனைவோருக்கான சிறந்த முன்னோடி விருது – திரு. பதுருத்தீன் அப்துல் மஜீத்
• இடையறாத சமூக நற்சேவைக்காக “மனித நேயச் செம்மல்” விருது – திரு. இனாயத்துல்லா
• தமிழ்மொழி இலக்கியச் சேவைக்காக “இலக்கியச் செம்மல்” விருது – திரு. பொன் சங்கர பாண்டியன்
கலாச்சார நிகழ்ச்சிகள்:
• வண்ணமயமான பாரம்பரிய தமிழ் பண்பாட்டு தொடக்க நடனத்துடன் கலாச்சார நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான மாணவிகள் கலந்துக் கொண்டனர். பாரதி தமிழ் சங்க கலை பண்பாட்டு, கேளிக்கைச் செயலாளர் திருமதி ஹன்சுல் கனி இந்த வண்ணமயமான நடனத்தை கலைநயத்துடன் வடிவமைத்திருந்தார்.
• திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி – தமிழ்த் திரையுலக பின்னணிப் பாடகர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஃபரிதா இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து வழங்கினர். இவர்களுடன் இணைந்து முத்துத்தீவில் பிரபலமாகத் திகழும் இசைக் கலைஞர்கள் ஷோபனா சிவா , சங்கீதா, அபி ராம், அனீஸ் பாத்திமா, லஷ்மி பிரியா மற்றும் ரமேஷ் ராம் பங்கேற்றனர். இசைப்பிரியர்களின் உள்ளத்தை தங்கள் இனிமையான குரலால் இதமாக கொள்ளை கொண்டனர்.
நிகழ்ச்சியின் உச்சக்கட்ட சிறப்பு அம்சமாக நகைச்சுவை விருந்து களைகட்டியது. ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப
பார்வையாளர்களின் சிரிப்பொலி அரங்கத்தின் கூரையைப் பிளந்தது .
‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் ‘கறுப்பு ரோஜா’ என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அறந்தாங்கி நிஷா மற்றும் ‘கலக்கப்போவது யாரு ‘ புகழ் முனைவர் பழனி ஆகியோர் இணைந்து நடத்திய காமெடி நிகழ்ச்சி ரசிகர்களை சிரிப்பலை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
பாரதி தமிழ் சங்க பொதுச் செயலாளர் திரு. அப்துல் கையூம் நிகழ்வை முழுமையாக தொகுத்து வழங்கினார்.
“நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பஹ்ரைன் மண்ணில் இப்படியொரு மனநிறைவான நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்” என ஒவ்வொருவரும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
சங்க வரலாற்றில் முறையான பொதுத் தேர்தல் முதன்முறையாக நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட புது செயற்குழுவின் அபாரமான உழைப்புக்கு கிடைத்த முடிசூடல் இது எனலாம்.
அடுத்தடுத்து வரும் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
முதன்முறையாக மிகபெரிய உள்ளரங்கில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி இதுவரை நடத்திய அனைத்து முந்தைய நிகழ்ச்சிகளையும் மிஞ்சியிருந்தது.
அது மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடையே இது மிகுந்த பேசுபொருள் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயலாளராக செயற்பட்ட முத்துவேல், இந்நிகழ்வை முன்னெடுக்க உதவிய கோகுல், துணை நின்ற சக்திவேல், இஸ்மாயில் தலைமையில் களம் கண்ட தன்னார்வத் தொண்டர்கள் ,மேலும் சல்மான் மாலிம் , தாவுத், யூனுஸ், சுபாஷ், இளையராஜா, சபீக், கனி, சுப்பு, ஆசாத், சதீஷ், குடந்தை ஆரிப், பிரபாகரன்
இன்னும் எண்ணற்ற அன்பர்களின் உழைப்பு இவை எல்லாம் சேர்ந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக்கியது.
முழுவதுமாக துணை நின்று நிகழ்ச்சியை சிறப்புறச் செய்த பாபு மற்றும் வசந்த் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நிகழ்வு பாரதி தமிழ் சங்கத்தின் வழக்கப்படி கட்டணம் ஏதுமின்றி ‘அனுமதி இலவசம்’ என அறிவிக்கப்பட்டிருந்தது .
சமூக ஊடகங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் பகிர்வுகள் , விளம்பரங்கள் பெருமளவு கூட்டத்தைத் திரட்ட காரணமாக இருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
அனைத்துக்கும் மேலாக நம் ஸ்பான்சர்கள் . அவர்களின்றி இந்நிகழ்வு நடைபெற்று இருக்காது.