சென்னை: கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்டை வாபஸ் பெற்றுள்ளது இந்திய வானிலை மையம். மேலும் மிக கனமழை எச்சரிக்கையானது, கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபெங்கல் புயல் உருவாக மேலும் கால தாமதம் ஆகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26-11-2024) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடர்கிறது.
தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் 3 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, மாலை 5 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 420 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தென்காசி விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வெலி கன்னியாகுமரி திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது ஆழ்ந்த தாழ்வு நிலையானது இன்னும் சில மணி நேரங்களில் ஃபெங்கல் புயலாக மாற உள்ள நிலையில் பழவேற்காடு, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிக அளவில் இருக்கிறது. இதனையடுத்து சென்னை தொடங்கி நாகப்பட்டினம் வரை கடலோரப் பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபெங்கல் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயல் உருவாகும் எனவும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் அதிக கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.